பதிவு செய்த நாள்
25
மே
2020
04:05
கோவை மாவட்டம் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் விஷபயம் தீர்ப்பவராக இருக்கிறார். செந்நிற லிங்கமாக காட்சி தரும் இவரை பிரதோஷத்தன்று தரிசிப்பது சிறப்பு.
அமிர்தம் பெற விரும்பிய தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மத்தாக பயன்பட்ட வாசுகி என்னும் பாம்பு விஷத்தை உமிழ்ந்தது. அதனால் ஏற்பட்ட உஷ்ணத்தை தேவர்களால் தாங்க முடியவில்லை. அவர்களுக்காக விஷத்தை திரட்டி விழுங்க முயன்றார் சிவன். அதைக் கண்டு திடுக்கிட்ட பார்வதி கணவரின் கழுத்தைப் பிடித்ததால், விஷம் அப்படியே நின்றது. இதனால் சிவனுக்கு நஞ்சுண்டேஸ்வரர் எனப் பெயர் வந்தது. இதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூட்டில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இவரைக் குலதெய்வமாக வழிபட்ட மக்கள், காலப்போக்கில் தொழில்ரீதியாக இடம் பெயர்ந்து காரமடைப்பகுதியில் குடியேறினர். 1200 ஆண்டுகளுக்கு முன் வீரநஞ்சராயர் என்பவர் இக்கோயிலைக் கட்டினார்.
இங்கு மூலவர் சிவலிங்கம் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே கருவறை விமானத்தை எட்டுத்திசைகளிலும் யானைகள் தாங்குகின்றன.
பாற்கடலில் எழுந்த விஷத்தை பிரதோஷ நாளில் சிவன் குடித்ததால், இங்கு பிரதோஷ பூஜையில் தரிசிப்பது சிறப்பு. விஷகடியால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னை தீர சுவாமியை வழிபடுகின்றனர்.
அம்மன் லோகநாயகி என்னும் பெயரில் அருள்கிறாள். சிவன், அம்மன், ஆறுமுக வேலவர் சன்னதிகள் சோமாஸ்கந்த அமைப்பில் வரிசையாக உள்ளன. சிவனுக்கு இடதுபுறம் தனிக்கோயிலில் லிங்கவடிவில் ரங்கநாதர் எழுந்தருளியுள்ளார். புரட்டாசியில் வரும் விஜயதசமியன்று ரங்கநாதர் சிவன் சன்னதிக்கு எழுந்தருள்வார். பின்பு இருவரும் அம்பு போடும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வர். அன்று ஒருநாள் மட்டும் இருவரையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
சிவன் சன்னதியின் கோஷ்டத்தில் பாதாள விநாயகர் இருக்கிறார். மிகச் சிறிய மூர்த்தியான இவரை வணங்கிய பிறகே பரிவார தெய்வங்களை வழிபட வேண்டும். கோஷ்டத்தில் துர்காதேவி புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். அருகில் சிவலிங்கத்தை ராகு, கேது வழிபடும் சிற்பம் உள்ளது. ராகு, கேது தோஷம் தீர சிவன், துர்கையை தரிசிக்கின்றனர். கால பைரவர், சூரியன், செண்பக விநாயகர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன.
செல்வது எப்படி
கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் 30 கி.மீ.,
விசேஷ நாட்கள்
ஐப்பசி அன்னாபிேஷகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மகாபிரதோஷம்
நேரம்
காலை 6:00 – பகல் 12:30 மணி, மாலை 4:00 – இரவு 8:30 மணி,
தொடர்புக்கு
04254 – 272 318, 273 018, 94420 16192
அருகிலுள்ள தலம்: காரமடை ரங்கநாதர் கோயில்