அரியலுார் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அருள்புரியும் கலியுகவரதராஜப் பெருமாள் கல்கம்ப வடிவில் காட்சியளிக்கிறார். இவரை ஏகாதசியன்று தரிசித்தால் வாழ்வு வளம் பெறும். அரியலுார் சிதளவாடியில் முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் கோபாலன் என்பவர் வாழ்ந்தார். இவருடைய மகன் மங்கான் பசுக்களை மேய்த்து வந்தார். மந்தையில் கர்ப்பிணி பசு ஒன்று, மேயச் சென்றபோது காணாமல் போனது. மூன்று நாளாகத் தேடியும் கிடைக்கவில்லை. அன்றிரவு கனவில் ‘‘ கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்கு திசையில் உள்ள காட்டில் இரண்டு மைல் துாரத்திலுள்ள ஆலமரம், மாவிலிங்க மரத்துக்கும் இடையே உள்ள சங்கு இலை புதர் அருகில் உள்ளது. அங்கு ஈன்ற கன்றுடன் பசுவைக் காண்பாய்,’’ என்று சொல்லி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்ற போது, பசு தன் கன்றுடன் இருப்பதைக் கண்டார். அருகில் சாய்ந்து கிடந்த கம்பம் ஒன்றைக் கண்டார். அதன் மீது பசு பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் வணங்கி புறப்பட்டனர். அன்றிரவு மங்கான் கனவில் பெருமாள் தோன்றி, ‘‘ உன்பசுவை அழைத்துச் சென்று என்னை மட்டும் விட்டு விட்டாயே! உன் முன்னோருக்கும், எனக்கும் உள்ள உறவை நீ அறிய மாட்டாய். உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, இங்கு கல் கம்பம் கொண்டு வரும் போது வண்டியின் அச்சு முறிந்ததால் அப்படியே விட்டு விட்டனர். இன்று காலையில் நீ கண்டது அந்த கம்பம் தான். இதை நிலை நாட்டும் பொறுப்பு உன்னுடையது. அதை நீ உணரவே பசுவை மறைத்தேன். கலியுகப் பெருமாளான நான் உன் கவலை தீர்க்கவே இங்கு எழுந்தருளியுள்ளேன்’’ என்று சொல்லி மறைந்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலாக உள்ளது. விளைச்சல் செழிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் குணம் பெற முதல் கன்றை பெருமாளுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கியிருப்பது போல துாண் உள்ளது. இதனையே மூலவராக கருதி வழிபடுகின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று, உற்சவர் பவனி நடக்கும். உற்சவர் வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்புரிகிறார். தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தலவிருட்சமாக மகாலிங்க மரம் உள்ளது. செல்வது எப்படி அரியலுாரில் இருந்து இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் 6 கி.மீ., துாரத்தில் கல்லங்குறிச்சி விசேஷ நாட்கள் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரம். நேரம் காலை 6:30 – பகல் 12:30 மணி, பகல் 3:00 – இரவு 9:00 மணி. தொடர்புக்கு: 04329 – 228 890 அருகிலுள்ள தலம்: அரியலுார் பாலசுப்பிரமணியர் கோயில்