பதிவு செய்த நாள்
25
மே
2020
04:05
திவ்ய தேசங்களான மதுரை அழகர்கோவிலில் சுந்தரராஜப் பெருமாளும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாரயணப் பெருமாளும் அருள்புரிகின்றனர். இந்த இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம்.
17ம் நுாற்றாண்டில் சிவகங்கை ஜமீன் சுந்தர பாண்டியனால் கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில், திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடுள்ள இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசத்தை இணைக்கும் விதமாக இக்கோயிலைக் கட்டினார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜரும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணரும் பிரதிஷ்டை செய்தார். சுந்தர பாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவரது தாயார் மகமு நாச்சியார் திருப்பணிகளை முடித்து கோயிலை முழுமையாக்கினார். இவர்களின் சிலை முன்மண்டபத்தில் உள்ளது.
கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு உள்ளது. கீழே விரிந்த தாமரை இதழின் மீது ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மீது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் விளங்குகிறார். வேட்டைக்குச் செல்லும் மன்னர் போல, கிரீடம், கழுத்தில் ஆபரணம், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டையுடன் இருக்கிறார். வேடர் அம்சமாக சுந்தரராஜர் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து பக்தர்களை எதிர்நோக்கும் விதமாக இருக்கிறார்.
மற்றொருவரான சவுமிய நாராயணர் தனி சன்னதியில் உள்ளார். ‘சவுமியம்’ என்றால் ‘அழகு’ என்பதற்கு ஏற்ப அழகு மிக்கவரான இவர், தேவியருடன் உள்ளார். இவரது சன்னதியின் முன் ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அமர்ந்தபடி உள்ளனர். மூவரின் திருநட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.
மகாமண்டபத்தில் அனுமன் கைகள் குவித்தபடி இருக்கிறார். வேண்டிய வரங்களைத் தருவதால் ‘வரசித்தி ஆஞ்சநேயர்’ எனப்படுகிறார். ஐந்து வாரம் தயிர்சாத நைவேத்யம் செய்ய நினைத்தது நிறைவேறும்.
சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி தீபமேற்றுகின்றனர். அழகர்கோவில் போல இங்கும் காவல் தெய்வமாக கருப்பசாமி உள்ளார்.
செல்வது எப்படி
சிவகங்கை பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ளது
விசேஷ நாட்கள்:
சித்ரா பவுர்ணமி, அனுமன் ஜயந்தி, மாசி மகம், பங்குனி உத்திரம்
நேரம்
காலை 7:15 – 10:30 மணி, மாலை 5:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு
92455 28813, 99946 74433.
அருகிலுள்ள தலம்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயில் 29 கி.மீ.,