பதிவு செய்த நாள்
27
மே
2020
02:05
சென்னை : பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி, தமிழகம் முழுதும் கோவில்கள் முன், ஹிந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு, நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு உள்ளிட்ட, முக்கிய பூஜைகள் மட்டும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதே போல, சலுான்கள் திறக்கவும், ஆட்டோக்கள் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில்கள் திறக்கப்படாததால், பக்தர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை நம்பி இருக்கும் பல தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தகுந்த பாதுகாப்புடன் கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஹிந்து முன்னணி சார்பில், கோவில்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் வாசலில், ஹிந்து முன்னணி மாநில செயலர், மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோப்புக்கரணம் போட்டு, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, மக்களை காக்க வேண்டினர். பல இடங்களில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, பலரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.