பதிவு செய்த நாள்
28
மே
2020
10:05
கோபி : பக்தர்கள் தண்ணீர் மந்திரிக்க வசதியாக, கவுந்தப்பாடி அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில், 4,500 மண் சொப்புகள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, தங்கமேட்டில், பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. ராகு, கேது தோஷம் நீக்கும், பிரசித்தி பெற்ற தலமான இங்கு, உயிருடன் நாகங்கள் உலா வருகின்றன.இங்கு மந்திரித்தால், கொடிய விஷத்தன்மை கொண்ட நாகம் தீண்டியவர்களைக் கூட, பிழைக்க வைக்க முடியும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.தவிர, தோல் வியாதி, தோல் நமைச்சல், பூரான், தேள் கடி ஆகிய பிரச்னைகளுக்கு, மண் சொப்பில் தண்ணீர் மந்திரித்து, வேப்பிலை பாடம் போடப்படுகிறது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, உருவ பொம்மை வைத்து வழிபடுவது தனிச் சிறப்பு என்பதால், கோவில் வளாகம் முழுக்க, உருவச்சிலைகள் நிறைந்துள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 23 முதல் கோவில் மூடப்பட்டுள்ளது. தற்போது வரை, மூன்று கால பூஜைகள் மட்டுமே நடக்கின்றன.அறநிலையத் துறையினர் கூறியதாவது:தண்ணீர் மந்திரிக்கும் சொப்பு ஒன்று, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வழக்கமான மாதங்களில், 3,500 முதல், 4,500 மண் சொப்புகள் விற்பனையாகும். ஊரடங்கு தளர்த்தப்படும் போது, தேவைப்படும் என்பதால், பெருந்துறை அருகே, பெத்தாம்பாளையத்தில் உற்பத்தி செய்த, 4,500 மண் சொப்புகள் வாங்கி இருப்பு வைத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.