பதிவு செய்த நாள்
28
மே
2020
01:05
ஈரோடு: தமிழக அரசு அறநிலையத்துறை கோவில்களில், திருமணம் செய்வதற்கான முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில், 1,400 கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன், சென்னிமலை சுப்ரமணியர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் ஆகிய கோவில்களில் பலர் திருமணம், திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள விரும்புவர். கொரோனாவுக்கு முன்பாக பதிவு செய்த திருமணங்கள் மட்டும், கூட்டம் சேர்க்காமல் நடத்த அனுமதிக்கப்பட்டது. புதிததாக ஜூன், ஜூலையில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு, முன்பதிவு செய்து வைத்திருத்த திருமணங்கள் மட்டுமே, பத்து பேருடன் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு, 31வரை உள்ளது. ஜூன், ஜூலை மாதம் திருமணங்கள் நடத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்க வேண்டாம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை, திருமண விண்ணப்பங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கான அறிவிப்பும் கோவில் முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.