திருநீலகண்ட ஈஸ்வரர் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2020 02:05
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநீலகண்ட ஈஸ்வரர் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.
கயத்தாரை தலைநகரமாகக் கொண்டு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசாண்ட முத்துக்கிருஷ்ணபாண்டியன் என்ற சிற்றரசன், தனது அரசாட்சி காலத்தில் இவ்வூரின் நடுப்பகுதியில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய முத்துக்கிருஷ்ணேஸ்வரர்( திருநீலகண்ட ஈஸ்வரர்) திருக்கோயிலை அமைத்தார். கோயிலில் பல்வேறு பகுதிகள், குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்களும் பழுதடைந்துள்ளது; இதை பழுதுபார்க்க வேண்டும் என கயத்தாறு பகுதி பொதுமக்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் பழுதுபார்த்து புதுப்பிக்க ரூ.97.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.