பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் கோவில்,ஆலயம் ,பள்ளிவாசல் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலை பக்தர்கள் சுத்தம் செய்தனர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறி இருப்பதாவது: பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.