மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி விதி மீறி 469
கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் எப்போது இடித்து
அப்புறப்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இக்கோயில் கீழ சித்திரை வீதியில் ஜெயந்திலால் என்பவரின் துணிக்கடையில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. கடையின் 4 தளங்களும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ளே சென்று தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. யூ.பி.எஸ்., மூலம் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. கட்டடம் பலவீனமானதால் அப்பகுதி கடைகளை நேற்று திறக்க நேற்று போலீசார் அனுமதி மறுத்தனர். கோயிலை சுற்றிலும் மிகக்குறுகலான கடைகள் அதிகம் உள்ளன. ஏதேனும் விபத்து நேரிட்டால் அதிகளவு சேதத்தை உண்டு பண்ண இவை காத்திருக்கின்றன. கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த ஒரு வழக்கில், கோயிலை சுற்றி ஒரு கி.மீ.,ல் 469 வீதிமீறல் கட்டடங்கள் இருப்பதாகவும், விதிமீறல் பகுதிகளை இடிக்க உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு கட்டடம் கூட இடிக்கப்படவில்லை.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இது தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதால் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகி வருகிறது என்றனர்.