பதிவு செய்த நாள்
03
ஜூன்
2020
08:06
திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு நேற்று மதியம் வெளியிட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, மார்ச் 20 முதல், ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும், கோவிலில் தினசரி கைங்கரியங்கள் தவறாமல் நடத்தப்பட்டன.இந்நிலையில், நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படும் முன், கோவில்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஆந்திர அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
ஆனால், நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது, ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு இணங்கி, ஆந்திர அரசு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நேற்று காலை அரசாணை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு பக்தர்களுக்கிடையிலும், 6 அடி துாரம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதனால், மூன்று மாதங்களுக்குப் பின், வரும், 8ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு, பக்தர்களுக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.