பதிவு செய்த நாள்
03
ஜூன்
2020
03:06
சென்னை : கொரோனா தொற்று உச்சத்திற்கு செல்வதால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட கோவில்களில், ஜூலை, 15 ம் தேதி வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில், அரசு எந்த நிர்ப்பந்தத்திற்கும் ஆட்படக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொற்று உயரலாம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும், 15ம் தேதி வரை, கொரோனா தொற்று உயரலாம். அதன்பின் படிப்படியாக குறைந்து, ஜூலை முதல் வாரத்தில் தான், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருப்பது போல, நிலைமை மாறும் என அரசும், நிபுணர்களும் கூறி வந்தனர். அதன்படியே, சென்னையில் தற்போது, பாதிப்பின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு, 1,000 வரை சென்றுள்ளது.
அடுத்த, 10 நாட்களில், இது, மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில், வரும், 8ம் தேதி முதல், கோவில்களில், பத்தர்கள் தரிசனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மன அமைதி அதன்படி, கோவிலில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தால், இரண்டரை மாதங்கள் கழித்து, கடவுளை தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்கள் கூட்டம், கட்டுக்கடங்காமல் இருக்கும். அது, கொரோனா தொற்று பல மடங்கு பெருக வழிவகுத்து விடும். கோவிலுக்கு மன அமைதி தேடி, வருபவர்களில் பெரும்பாலானவர்கள், மூத்த குடிமக்கள் தான்.
அவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால், உயிர் பலி அதிகரிக்கும். எனவே, சென்னை உட்பட, நான்கு மாவட்ட கோவில்களில், ஜூலை, 15 ம் தேதி வரை, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது. அதை மீறி அனுமதித்தால், கோயம்பேடு மார்க்கெட்டால், கொரோனா பரவல் அதிகரித்தது போல, கோவில்களாலும் அதிகரித்து விடும் என்பது உறுதி. அரசு இந்த விஷயத்தில், எந்த விதமான நிர்பந்தத்திற்கும் ஆட்படாமல் முடிவெடுக்க வேண்டும். சமூக விலகலுடன் அதேநேரத்தில், மற்ற மாவட்ட கோவில்களில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம். அதுவும், கோவிலின் அளவுக்கு ஏற்ற வகையில், சமூக விலகலுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே, இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்க, குறிப்பிட்ட அளவில் டிக்கெட் வழங்கி, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்தால் நன்றாக இருக்கும்.