முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன்சுவாமிகள். முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் இவர். இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நுால் நோய் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது. சென்னையில் வாழ்ந்த இவர் சாலையில் சென்ற போது குதிரைவண்டி மோதியதால் இடக்கால் முறிந்தது. 73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சுவாமிகள் மீது அன்பு கொண்ட பக்தர்கள் சிலர், முருகனருளால் குணம் பெற வேண்டும் என சண்முக கவசத்தை நம்பிக்கையுடன் தினமும் படித்தனர். மருத்துவர்கள் அதிசயிக்கும்படி விரைவில் சுவாமிகளின் கால்கள் குணமானது. இதன் அறிகுறியாக வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்தாடியதை சுவாமிகள் கண்டார். உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டை முதலெழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் இக்கவசத்தில் உள்ளன. தினமும் ஆறுமுறை இதைப் பாடுவோருக்கு உடல்நலம் பெருகும். வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.