ராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளரான ராஜூக்கள் கல்லுாரி உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறினார்.
அவர் கூறியதாவது: இங்குள்ள ஆவுடையாபுரம் கருப்பையா நிலத்தை உழவு செய்யும்போது 6 அடி உயர கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது. நான்கு கைகளும் உடைந்த நிலையில் இருந்தது. வட இந்தியாவில் கொற்றவைக்கு சிங்கம்,புலி வாகனமாக உள்ள நிலையில் தமிழகத்தில் கலைமான் வாகனமாக உள்ளது அரிதாக உள்ளது. பாலை நிலமக்கள் வணங்கும் கடவுளாக விளங்குவதோடு காட்டு விலங்கு, வேட்டுவர்களை காக்கும் தெய்வமாகவும் உள்ளார். தற்போது கொற்றவை வழிபாடு பிடாரி, காளி, துர்க்கை போன்ற கடவுளின் வழிபாட்டோடு சேர்க்கப்பட்டுள்ளது. சிலை நிறுத்தப்பட்டுள்ள ஆசனக்கல், வாகனமான கலைமான் சுருங்கிய கொம்புகளுடன் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் ஏற்கெனவே 12ம் நுாற்றாண்டு சுவாமி சிலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆயிரம் ஆண்டுகள் முன்பு இங்கு பழமையான கோயில் இருந்துஅழிந்திருக்கலாம், என்றார்.