பதிவு செய்த நாள்
04
ஜூன்
2020
05:06
தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது நெடுவயல் கிராமம். இங்கு குழந்தை இல்லாத பெண் ஒருவர் இருந்தார். வழிப்போக்கர் இளைப்பாறும் மண்டபம் ஒன்றைக் கட்டினார். அங்கு தங்கிய ஞானி ஒருவருக்கு, அந்த பெண்ணும், அவரது கணவருமாக உபசரித்து உணவிட்டனர். அவரிடம் மனக்குறையை தெரிவித்த போது, ‘‘அம்மா! குழந்தைப்பேறு வாய்க்காது. இங்கு மலை மீதுள்ள ‘திருமலை முருகன்’ தான் உன் குழந்தை. அவனுக்கு சேவை செய்யவே பிறவி எடுத்திருக்கிறாய்’’ என்றார் ஞானி. அந்த பெண் பிற்காலத்தில், ‘சிவகாமி அம்மையார்’ எனப் பெயர் பெற்றார். இவர் திருப்பணி செய்த திருமலை முருகன் கோயில் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது. இத்தல முருகனைத் தன் மகனாக கருதிய அம்மையார் வசந்த மண்டபம் ஒன்றைக் கட்டினார். அதற்காக அவர் சந்தித்த சவால்கள் கணக்கில் அடங்காது.
அம்மையார் பணியை மேற்பார்வை செய்ய, கல் துாண்கள், உத்தரங்களை பனை நாரால் ஆன கயிற்றால் கட்டி பணியாளர்கள் மலை மீதிருந்து இழுப்பர். கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் விபூதி, கையில் வேல், மற்றொரு கையில் கமண்டலம், காவி உடையுடன் அம்மையார் வரும் போது, காண்பவர் எல்லாம் வணங்குவர். மேலே இழுக்கப்படும் கல்துாண் அல்லது உத்தரமோ கயிறு அறுபட்டு கடகட என்று உருண்டு விழும். அதைக் கண்ட அனைவரும் பதறி ஓட அம்மையாரோ, வேல் தாங்கியபடி,‘முருகா!’ என கூவியபடி தலையால் அதை தாங்குவார். 400 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இருந்து ஒரு கல் கூட எடுக்காமல், உயிரைப் பணயம் வைத்து மண்டபம் கட்ட அம்மையார் செய்த சாதனையை மக்கள் இன்றும் போற்றுகின்றனர்.
கோயில் பணிக்காக பெரிய அளவில், பனை நார் தேவைப்பட்டது. பனை மரங்கள் நிறைந்த திருச்செந்துாரில், தேவைக்கு பனைநார் கிடைக்கும் என எண்ணி அம்மையார் அங்கு சென்றார். அப்போது திருச்செந்துாரில் மாசித் திருவிழாவில்
தேரில் வலம் வந்து கொண்டிருந்தது. சுவாமியை கண்டதும் கண்ணீர் பெருக்கியபடி தன்னை மறந்து நின்றார். அம்மையார் நிற்பதை இடையூறாக கருதிய கோயில் பணியாளர் ஒருவர், கீழே தள்ளி அவமதித்தார். ‘‘முருகா! என்ன சோதனை இது? தேரில் வலம் வரும் உன்னை தரிசிப்பதைக் கூட தடுக்கிறார்களே!’’ எனக் கதறினார். யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
அடியவர் படும் துயரை முருகன் பொறுப்பாரா....வெகுண்டார்.
விளைவு...ஓடிய தேர் அசைவற்று நின்றது. கூடியிருந்தோர் முயற்சித்தும் தேர் அசையவில்லை.
அப்போது, அங்கிருந்த அர்ச்சகர் பரவசநிலை அடைந்தார். ஆவேசமாக, ‘‘என் பக்தையான சிவகாமி தேருக்குப் பின்புறம் மனம் கலங்கி நிற்கிறார். அவர் வடம் பிடித்து இழுத்தால் தான் தேர் ஓடும்’’ என்றார்.
நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அனைவரும் கண்ணீருடன் நின்ற அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டதோடு வடம் பிடிக்கவும் வேண்டினர். அம்மையார், ‘‘கந்தா! இந்த எளியவள் மீது இவ்வளவு கருணையா?’’என்று வடம் தொட்டு தேர் இழுத்தார். தேர் ஓடத் தொடங்கியது. ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’’ என பக்தர்கள் கோஷமிட்டனர்.
அதன் பின் நிர்வாகத்தினர்,‘‘அம்மா! திருமலை முருகன் கோயில் திருப்பணி பற்றி கேள்விப்பட்டோம்! உலகமே உங்களின் பெருமையை அறிய வேண்டும் என்பதற்காக இந்த திருவிளையாடலை முருகன் நிகழ்த்தியுள்ளார். உங்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு. தேவையான பனைநாரினை திருமலைக்கு அனுப்புகிறோம்’’ என வாக்களித்தனர்.
திட்டமிட்டபடி அம்மையார் திருமலை முருகன் கோயிலில் வசந்தமண்டபம் கட்டி முடித்தார்.
1854 ஜூன் 9 (வைகாசி 28) வெள்ளிக்கிழமையன்று சிவகாமி அம்மையார் சித்தியடைந்தார். பெண் சித்தரான அம்மையாரின் சமாதி, திருமலை முருகன் கோயிலுக்குக் கிழக்கே வண்டாடும் பொட்டல் என்னும் இடத்தில் உள்ளது.