நான் மரணமடைந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆவியாக அலைந்து கடைசியில் கடவுளின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன். கூடவே தாரணி என்ற தேவதையும் இருந்தாள். லேசாகத் திறந்திருந்த கதவு வழியாக உள்ளே பார்த்தோம். உள்ளே ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அபிராமி பட்டர், ரமண மகரிஷி, யோகி ராம் சூரத்குமார் போன்ற தெய்வப்பிறவிகள் இருப்பார்கள் என எதிர்பார்த்தேன். அதிர்ந்தேன். உள்ளே இரணியன், நரகாசுரன், பண்டாசுரன் போன்ற அசுரர்கள், ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரிகள். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சதிகாரர்கள், வஞ்சகர்கள். பச்சைப்புடவைக்காரி அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். “இதென்னப்பா இப்படி இருக்கிறது?” - தாரணி கேட்டாள். எனக்கு முதலில் கோபம் வந்தது. பின் மனம் அமைதியடைந்தது. பேச ஆரம்பித்தேன். “ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசலில் நிறையப் பூக்கடைகள் இருக்கின்றன. அதில் ஒன்று என் பூக்கடை. என் கடையில் புத்தம்புது மலர்கள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாலைகள் ஏராளமாக இருக்கின்றன. “மற்ற கடைகளில் இருப்பதெல்லாம் வாடி வதங்கிய பழைய மலர்கள். அவற்றில் மணம் இல்லை. மாலைகளில் நேர்த்தியில்லை. “பச்சைப்புடவைக்காரி அங்கே வருகிறாள். நல்ல மலர்கள் நிறைய இருக்கும் என் கடையை ஏறெடுத்தும் பார்க்காமல் எனக்கு அடுத்த கடையில் இருக்கும் வாடிய மலர்களை வாங்கிக்கொள்கிறாள். பெருமையுடன் தன் தலையில் சூடிக்கொள்கிறாள். பூக்கடைக்காரர்கள் வகுத்த நியதிகளின்படி என் கடைச் சரக்கு எனக்கு உத்தமமாகப் படலாம். ஆனால் அந்தச் சக்கரவர்த்தினியின் பார்வையில் அவை குப்பைதானே! நான் மலர்களைச் சொல்லவில்லை. என்னைச் சொல்கிறேன். நான் அவளையே நினைத்து உருகுவதால் நான் அவள் மனதுக்குப் பிடித்த மகன் என மனக்கோட்டை கட்டி வைத்திருந்தேன். அதை ஒரே நொடியில் அடித்து நொறுக்கிவிட்டாள் அன்னை. பச்சைப்புடவைக்காரி இதுவரை என் மீது காட்டிய அன்பை என்னால் வார்த்தைகளால் விளக்கமுடியாது. ஒரே இடத்தில் ஆயிரம் தாய்மார்கள் இருந்து அவர்கள் அனைவருக்கும் நான் ஒரே மகனாக இருந்து, அந்த ஆயிரம் பேரும் உடல் நலத்துடன் இருந்து ஒரு சேர என் மீது அன்பு காட்டினால் எனக்கு எவ்வளவு அன்பு கிடைக்கும்? அதைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு என்னை நேசிப்பவள் பச்சைப்புடவைக்காரி. அப்படிப்பட்டவளே என் கடையில் இருக்கும் மலர்கள் வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? ஒன்று, உண்மையிலேயே என் கடை மலர்கள் அவளது பார்வையில் நன்றாக இல்லை என்று பொருள். இல்லாவிட்டால் என் செயல் அன்னையை புண்படுத்தியிருக்கவேண்டும். அதனால் என் மீதுள்ள வெறுப்பை என் கடை மலர்கள் மீது காட்டுகிறாள். தாயே...அவளுக்கு என் கடையைவிட்டால் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. எனக்கு அவளை விட்டால் யார் இருக்கிறார்கள்?. அவள் என் கடை மலர்களை வாங்காவிட்டால் அவை வாடி வதங்கிவிடும். ஒரு வேளை அப்படி நடக்கவேண்டும் என்பதுதான் அவள் எண்ணமோ? யாருக்குத் தெரியும்? எல்லாம் அவள் விருப்பப்படியே நடக்கட்டும் தாயே!” ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. காட்சி மறைந்தது. தாரணி என்னை அணைத்துக்கொண்டாள் “எனக்குப் பெருமையாக இருக்கிறதடா! நீ கண்ட காட்சி பொய். மாயை. காட்சிப் பிழை. அந்தக் காட்சிதான் உனக்கு வைக்கப்பட்ட இறுதிக்கட்ட சோதனை. அதில் வென்றுவிட்டாய். நீ அன்னையுடன் இணையும் நேரம் வந்துவிட்டது. மேலே நட.” நான் அன்னையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வரலொட்டி ரெங்கசாமியின் “மரணத்தின் தன்மை சொல்வேன்” என்ற நுாலில் இருந்து