பதிவு செய்த நாள்
05
ஜூன்
2020
05:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை விதித்துள்ளதால், கோவிலினுள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கவில்லை, இதனால், கோவில் வளாகம், மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். வைகாசி மாத பவுர்ணமி திதி இன்று அதிகாலை, 3:22 மணி முதல், இன்று, (6ம் தேதி) அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கோவிலினுள் பக்தர்களை அனுமதிக்காமல், ஆறு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. பங்குனி, சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வைகாசி மாத பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். இதனால், நேற்று பவுர்ணமி கிரிவலம் செல்ல முடியவில்லை. மேலும், கோவில் மாட வீதி, கோவில் வளாகம், கிரிவலப்பாதை, பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசாரின் கெடுபிடியால், காய்கறிகள் போன்றவற்றை விற்பனைக்கு வெளியே எடுத்து செல்ல முடியாமல், கிரிவலப்பாதையில் உள்ள கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.