பதிவு செய்த நாள்
06
ஜூன்
2020
11:06
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் வழிபாட்டு தலங்களை, நாளை மறுநாள் முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளை தொடக் கூடாது; பிரார்த்தனை பாடல்கள் பாடக் கூடாது; பிரசாதம் கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவிலிருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன; பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது; பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.நான்காம் கட்ட ஊரடங்கு கடந்த மாத இறுதியில் முடிவடைந்தபோது, வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சமூக இடைவெளியை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.ஐந்தாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில், ஜூன், 8 முதல், வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால் திறக்க அனுமதிக்கப்படும். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு, சமூக விலகல் நடைமுறையுடன் அனுமதி அளிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.
வழிபாட்டு தலங்கள்: வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டு தலங்கள், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:l வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள், சுவாமி சிலைகள், புனித நுால்களை தொடக் கூடாதுl ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமானோர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
* பக்தர்கள் பிரார்த்தனை பாடல்களை பாட அனுமதி கிடையாது. ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆன்மிக பாடல் மற்றும் இசையை ஒலிபரப்ப தடையில்லை
* பக்தர்களுக்கு பிரசாதம், தீர்த்தம் கொடுக்க அனுமதி இல்லை
* பக்தர்கள் சந்திக்கும்போது, ஒருவரை ஒருவர் தொட்டு பேச அனுமதி இல்லை
* பக்தர்கள் அமருவதற்கு பொதுவான, மேட் எனப்படும் தரை விரிப்புக்கு அனுமதியில்லை. வழிபாட்டு தலத்துக்கு வரும் பக்தர்கள், தனித் தனி தரைவிரிப்பு எடுத்து வர வேண்டும்
* தரிசனத்துக்காக வரிசையில் நிற்கும்போது, ஒவ்வொரு பக்தருக்கும் இடையே, குறைந்தது, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்
* வழிபாட்டு தல வளாகத்துக்குள் நுழையும்போது, அனைவரும், கை மற்றும் கால்களை சோப் அல்லது தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
வழிபாட்டு தல நிர்வாகம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் :
*வழிபாட்டு தலங்களின் நுழைவாயில்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு, பக்தர்களின் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்; இது, கட்டாயம்
* வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க வேண்டும்l முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
* வழிபாட்டு தலங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும். இது தொடர்பான படக் காட்சிகளையும் ஒளிபரப்பலாம்
* வழிபாட்டு தல வளாகத்தில் அதிக கூட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக விலகல் நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்l வழிபாட்டு தல வளாகத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள கடைகளிலும் சமூக விலகல் நடைமுறை அவசியம்
* வரிசைகளில் பக்தர்கள் எந்தெந்த இடைவெளியில் நிற்க வேண்டும் என்பதை, பெயின்ட் அல்லது மார்க்கரில் வட்டமிட வேண்டும்l உள்ளே வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித் தனி வாசல் அமைக்கப்பட வேண்டும்
* வழிபாட்டு தல வளாகம் முழுதும் அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர், கை, கால்களை சுத்தம் செய்வதற்கு போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
* பக்தர்கள், வழிபாட்டு தல ஊழியர்கள் உபயோகப்படுத்திய முக கவசங்களை முறையாக அகற்ற வேண்டும்.