முல்லா சுவர் கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். அதற்கு ஆணி அடிக்க சுத்தியல் வீட்டில் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க நினைத்தார். இரவாகி விட்டதால் இந்நேரம் போய் கேட்பது சரியல்ல; நாளை காலையில் கேட்கலாம் என எண்ணி துாங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்ததும் சுத்தியல் நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்ல எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. இன்று போய் கேட்டால் ஏதாவது நினைப்பாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!. மூன்றாவது நாள் பக்கத்து வீட்டை நெருங்கினார். அங்கு நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதைக் கண்டார். வாசலோடு திரும்பி விட்டார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் தடுத்தது. இப்படியே ஒரு வாரமாகியும் ஆணியடிக்க முடியவில்லை! அந்த கடிகாரம் முல்லாவைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. உடனே பக்கத்து வீட்டுக்கு விரைந்தார். ‘‘உன் சுத்தியலை நீயே வைத்துக் கொள்! எனக்கு ஒன்றும் தேவையில்லை! பொல்லாத சுத்தியல்! நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கிறாயா?’’ என கோபத்தில் கத்தினார். பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை! பரிதாபமாக பார்த்தார். மனிதர்களில் பலரும் முல்லாவைப் போல உள்ளதை சொல்லாமல் மனதில் ஒன்றை நினைத்து எதை எதையோ சொல்லத் துடிக்கிறார்கள். பின் பிரச்னைகளில் மாட்டி வருந்துகின்றனர். இந்த நீதியை உணர்த்துவதே இதன் நோக்கம்.