எலிசபெத் ஃபிரை ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதியாக ஆவார். இவரை "சிறைகளின் தேவதை" எனவும் அழைத்தனர். கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்க பாடுபட்டார். எலிசபெத் பிரை 1780 மே 21ல் இங்கிலாந்தின் நார்விச் நகரில் பிறந்தார். 12 வயதில் அவர் தாய் இறந்த பிறகு தம்பி, தங்கையரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இவருக்கு இருந்தது. 18 வயதில் நண்பர்கள் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் சேவரியின் சமய சொற்பொழிவைக் கேட்டார். இதுவே வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின் இயேசுவை தன் ரட்சகராக ஏற்றுக் கொண்டார். ஏழைகள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறைச்சாலைகளில் துன்பப்படுவர்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்தார். பழைய துணிகளைச் சேகரித்து ஏழைகளுக்கு வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை பள்ளியைத் தொடங்கி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். ஜோசப் பிரை என்பவரைத் தன் 20ம் வயதில் திருமணம் செய்த இவர், லண்டனில் சேவையைத் தொடர்ந்தார். இவர் ஒருமுறை இவர் நியூகேட் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு கைதிகளின் மோசமான நிலை கண்டு வருந்தினார். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் இடநெருக்கடியில் சிக்கித் தவித்தனர். அங்கேயே அவர்கள் சமைத்தும், துணிகளைத் துவைப்பதும், வைக்கோலில் துாங்குவதுமாக இருந்தனர். தானும் அவர்களுடன் தங்கி துன்பத்தில் பங்கேற்றார். அந்த அனுபவங்களைத் தொகுத்து ” ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் உள்ள சிறைச்சாலைகளைப் பற்றிய குறிப்பு” என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் உணவு, உடைகளைச் சேகரித்து சிறைச்சாலையில் துன்பப்படும் கைதிகளுக்கு வழங்கினார். 1816ல் சிறையில் இருந்த பெண்களுக்கும் ஒரு பள்ளியைத் தொடங்கி கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டார். எலிசபெத்திடம் நட்புடன் பழகிய கைதிகள் அவரை ”சிறைச்சாலையின் தேவதை ” என அழைத்தனர்.. 1817ல் ”நியூகேட் சிறைசாலையின் பெண் கைதிகளுக்கான சீர்திருத்தச் சங்கம்” தொடங்கினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முதல் தேசிய மகளிர் சங்கமான பெண் கைதிகள் சீர்திருத்த முன்னேற்ற சங்கம் தோன்றியது. இங்கிலாந்து அரசி விக்டோரியா இவரது பணியை பாராட்டி பெரும் தொகையை நன்கொடை வழங்கினார். கைதிகளும் மனிதர்கள்தான் என்று உணர்த்திய பிரை 1845 அக்.12ல் மறைந்தார். இவர் செய்த சமூகப்பணி, இறைப்பணியை இன்றும் உலகம் போற்றுகிறது.