அசோகவனத்தில் இருந்த சீதையிடம், அரக்கியான திரிசடை சரணாகதி அடைந்தாள். அவள் ஒருத்திக்காக அரக்கப் பெண்களை எல்லாம் அனுமனிடம் இருந்து சீதை காப்பாற்றினாள். ‘‘ராவணனிடம் சேர்ந்து வாழ்! இல்லாவிட்டால் நீ பிழைக்க முடியாது’’ என அரக்கிகள் சீதைக்கு நெருக்கடி கொடுத்தனர். நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்பது போல, நல்லவளான திரிசடையால் எல்லா அரக்கிகளும் பிழைத்துக் கொண்டனர். ‘‘தாயே! கட்டளை இடுங்கள். இந்த அரக்கியர் கூட்டத்தை பந்தாடி விடுகிறேன்’’ என்றார் அனுமன். ‘‘ இந்த பெண்கள் என்னை ஏசியும் பேசியும் வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் ராவணன் மீதுள்ள பயத்தால் என்னைப் பழித்தார்களே தவிர, உண்மையில் என் மீது வெறுப்பு கொள்ளவில்லை. உன் பார்வையில் இவர்கள் தப்பு செய்தவர்கள்தான். ஆனால் உலகத்தில் தப்பு செய்யாதவர் யார் இருக்கிறார்கள்?’’ எனக் கேட்டாள் சீதை. இதைச் சொன்னதும் அனுமனின் முகம் வெளுத்தது. தப்பே செய்யாத ராமன் இருக்கிறாரே என்ற எண்ணிய அனுமன் அதிர்ச்சியடைந்தான். அதை உணர்ந்தவளாய் சீதை, ‘‘ உன் எண்ணத்தை நான் அறிவேன். ராமரும் தப்பு செய்தவர் தான்! தன் மனைவியை மாற்றான் கடத்தி வந்து விட்டானே என ஓடி வந்து காப்பாற்றினாரா? அது குற்றம் தானே!’’ எனக் கேட்டாள். அனுமனும் தலையசைத்தார். அதன் பின் ஒரு சந்தேகம் வந்தது அனுமனுக்கு. ‘‘அம்மா! நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள்! அதையும்தான் சொல்லுங்களேன்!’’ என புன்னகைத்தார். ‘‘ நன்றாகக் கேட்டாய் அனுமா! கணவனைப் பற்றி மற்றவரிடம் விமர்சிப்பது பெண்ணுக்கு அழகா? ஆனால் இவ்வளவு நேரமும் என் ராமனைப் பற்றி குறை கூறினேனே! அதுவே நான் செய்த பெரிய தப்பு!’’ என்றாள்.