இந்த உலகத்தில் பிறந்த பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன்பிறகு, மனசாட்சி உறுத்துவதால், இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. நிச்சயமாக, தண்டனை வழங்கியே தீருவான். ஆனால், மூன்றே மூன்று வகையினர் இந்த தண்டனையிலிருந்து விலக்குப்பெற வழியுண்டு. தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே தவறை செய்து விடக்கூடாது. குறிப்பாக, உண்மை பேசுவதை தன் உயிர் மூச்சாக எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மைக்கு இந்த உலகில் உயர்ந்த இடமுண்டு. அதுபோல, கோபமாகப் பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும். கோபப்படுபவனை அல்லாஹ் ஏற்பதில்லை. இதன்பிறகு, தனது தவறுகளுக்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆக, உண்மையாளன், கோபப்படாதவன், இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகிய மூவகையினரை மட்டும் அல்லாஹ் மன்னிக்கிறான். உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றி விடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான், என்கிறார் நபிகள் நாயகம்.