சதகத்துல் ஜாரிய என்பது மனிதன் வாழும் காலத்திலும், இறந்து விட்ட பிறகும் நன்மை அளிக்கும் தர்மங்கள். இறை இல்லம், கல்விக்கூடம், மருத்துவமனை, தண்ணீர் விநியோகம் போன்ற தர்மங்கள் இதிலடங்கும். இதற்கோர் முன்மாதிரியாக உஸ்மான் வாழ்வில் அற்புத நிகழ்ச்சி நடந்தது. அவரது காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது யூதர் ஒருவருக்கு சொந்தமான கிணறு மட்டும் வற்றவில்லை. வாய்ப்பை பயன்படுத்திய அவர் தண்ணீரை அதிக விலைக்கு விற்றார். உஸ்மான் அந்த கிணற்றை விலைக்கு கேட்டார். அவர் கொடுக்க மறுத்தார். ‘‘அன்பரே! ஒரு பகுதியையாவது விலைக்கு கொடு! ஆளுக்கொரு நாள் வீதம் முறை வைத்து பயன்படுத்திக்கொள். உன்னுடைய முறை அன்று நீ என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்’’ என்று யோசனை கூறினார். நல்ல விலைக்கு விற்று பெரும் பணத்தை பெறலாம் என்ற பேராசையில் விற்க சம்மதித்தான். உஸ்மான் கிணற்றின் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்கு தர்மம் செய்ய தொடங்கினார். மக்களும் மகிழ்ச்சியுடன் தண்ணீர் எடுத்தனர். மறுநாளைக்கு தேவையான தண்ணீரை சேர்த்து எடுத்து செல்லலாயினர். அதனால் யூதனுடைய வியாபாரம் நலிந்தது. பணம் கொடுத்து வாங்குவோர் யாருமில்லை. வேறு வழியின்றி யூதர் தன்பங்கு கிணற்றையும் உஸ்மானிடம் விற்க முடிவெடுத்தார். அதனையும் விலைக்கு வாங்கி மக்களுக்கு தர்மமாக கொடுத்தார். இந்த அடிப்படையிலே தான் முன்னோர்கள் வழிப்போக்கர்களின் தேவைக்காக பொது இடங்களில் தண்ணீரை வைத்தும், தானம் அளித்தும் வந்தனர். தலைச் சுமையை இறக்கி வைக்க சுமைதாங்கி என்னும் பெயரில் உயரமான கற்பலகையை ஏற்படுத்தி வைத்தனர். சிலர் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வளர்த்தனர். இப்படிப்பட்ட நற்செயல்களே சதகத்துல் ஜாரிய என்னும் தர்மமாகும். ‘‘நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதற்காக நீங்கள் செலவு செய்யாத வரை நன்மையை பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். எந்த பொருளை நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக இறைவன் நன்கறிவான்’’ இந்த வசனம் அருளப்பட்ட போது தோழர் அபூதல்ஹா, ‘‘இறைத்துாதரே! என்னுடைய சொத்துக்களில் மிகவும் பிரியமானது பைரஹா என்னும் தோட்டம். இறைவனின் அருளைப் பெற அதையே தர்மம் செய்ய விரும்புகிறேன்’’ என்றார். நண்பரின் உயர்ந்த நோக்கத்தை அறிந்த நாயகம், ‘‘நண்பரே! பைரஹா நல்ல பலன் தரக்கூடிய தோட்டமாக இருக்கிறது. எனவே அதை உங்களுடைய ஏழை உறவினர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது நல்லது’’ என யோசனை தெரிவித்தார். அபூதல்ஹாவும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்ச்சி மூலம், தர்மம் என்பது பயன்படாத பொருட்கள், மிச்சம் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள், உபயோகமற்ற ஆடைகள், தேவையின்றி ஒதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் என பிறருக்குக் கொடுப்பது தர்மம் ஆகாது. நாம் எதை உண்ண, உடுத்த, பயன்படுத்த விரும்புகிறோமோ அதையே மற்றவருக்கும் கொடுப்பதே உண்மையான தர்மம் என்பது விளங்கும்.