இத்தாலியில் உள்ள பியட்ரல்சினாவைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பிரான்செஸ்கோ போர்ஜியொன் 1887 மே 25ல் பிறந்தார். சிறுவயதில் பலிபீடப் பணியாளராக இருந்து தேவாலயத் திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினமும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் ஜெப மாலை ஜெபிப்பதையும், வாரத்தில் மூன்று நாள் புலால் உணவைத் தவிர்த்தும் வந்தனர். சிறு வயதில் இருந்தே பக்தியில் ஈடுபட்ட இவர், 1903 ஜன.22ல் பியோ என்னும் பெயருடன் துறவறம் மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின் 1910ல் குருவாக மாறினார். 1917 ல் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்தார். அப்போது உடல்நலம் குன்றி நீண்டகாலம் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மீண்டும் பணியில் மும்முரம் காட்டினார். 1918 செப்.20ல் பியோ ஐந்து திருக்காயங்களை பெறும் பேறு பெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள், வலது விலாப்பகுதியில் இயேசுவைப் போல காயங்கள் இவருக்கு கிடைத்தன. இறப்பு வரை இயேசு சிலுவை மரத்தில் அனுபவித்த பாடுகளையும், வேதனைகளையும் பியோவும் காயங்களால் அனுபவித்தார். இவரது காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்க முடியாத அதிசயமாக இருந்தது. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்த போது காயங்களின் தாக்கம் எலும்புகளை பாதிக்கவில்லை என உறுதி செய்தார். 1968 செப். 23ல் ஜெபமாலையைக் கையில் பிடித்தபடி 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். 1999ல் அருளாளர் பட்டமும், 2002ல் புனிதர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.