1986ம் ஆண்டில் பத்து நாள் பயணமாக போப் இரண்டாம் ஜான் பால் இந்தியா வந்தார். பிப்.3ல் அன்னை தெரசா நடத்திய நிர்மல் ஹ்ருதய் (துாய இதயங்களுக்கான இல்லம்) என்னும் ஆஸ்ரமத்துக்கு வந்தார். இறப்பின் விளிம்பில் இருப்போருக்கான தொண்டு நிறுவனம் இது.
போப்பின் வருகை கோல்கட்டாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் லட்சக்கணக்கில் கூடினர். நிர்மல் ஹ்ருதய் செல்லும் வழியில் 10 கி.மீ., துாரம் வழியெங்கும் காத்திருந்தனர்.
இதற்கு முன்பு போப்பும், தெரசாவும் பலமுறை சந்தித்துள்ளனர். அவர் போப் ஆவதற்கு முன்பே, தொண்டு நிறுவனங்கள் சார்ந்த கருத்தரங்குகளில் சந்தித்திருக்கிறார். ஆனாலும் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. ஆஸ்ரமத்தில் போப்பை வரவேற்றார் தெரசா. போப்பின் கையில் முத்தம் பதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சாவின் விளிம்பில் இருந்த 120 நோயாளிகளை அங்கு கண்டார். கோல்கட்டாவின் ஏழ்மைக் காட்சிகள் போப்பின் மனதை உலுக்கின. அங்கிருந்த மக்களைத் தழுவிய அவர், ‘‘உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியாது. எல்லா வலியையும் போக்க முடியாது. ஆனால் ஒன்றை நான் உறுதியாக நம்புகிறேன். நித்திய அன்பால் ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவருடைய பார்வைக்கு அருமையானவர்கள்’’ என்றார். நிகழ்வின் முடிவில் போப், ”நிர்மல் ஹ்ருதய் நம்பிக்கையின் இருப்பிடம். தைரியத்தாலும், நம்பிக்கையாலும் எழுப்பப்பட்ட கட்டடம். அன்பினால் நிறைக்கப்பட்ட அரங்கம்’’ என்றார். அப்போது ‘‘இதுவே என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம்’’ என்றார் அன்னை தெரசா.