பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள 47 யானைகளின் மதபாடு இல்லாத 27 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் யானைகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம், ஜீவதானம் என்ற பெயரில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முகாம், புன்னத்தூர் கோட்டை பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. எம்.எல்.ஏ., அப்துல் காதர் விநாயகன் என்ற யானைக்கு மூலிகை உணவூட்டி முகாமை துவக்கி வைத்தார். ஜீவதானம் சிறப்புக் குழு உறுப்பினர்கள் தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு மாதம் நடக்கும் முகாமில் அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சிவப்பிரகாசம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கப்படவுள்ளன; இதற்காக தேவஸ்தானம் சார்பில் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.