சென்னை : அறநிலைய துறை சார்பில் திருக்கோவில் என்ற பெயரில் டிவி துவக்கப்பட உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து அனுப்பும்படி கோவில் செயல் அலுவலர்களுக்கு அறநிலைய துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ளகடிதம்:அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட திருக் கோவில் என்ற பெயரில் 8.77 கோடி ரூபாய் மதிப்பில் டிவி துவக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக டிவி ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங் மற்றும் வர்ணனைகளை இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.திருக்கோவில் டிவியில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்ய அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன. எனவே ஒவ்வொரு கோயில்களில் நடக்கும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் 4k Resolution Cameraவைத்திருக்கும் வீடியோகிராபர் வாயிலாக ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளாக அவர் தெரிவித்துள்ளவை:
கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள், கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள் இடம்பெற வேண்டும். கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்
* தல வரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன் இடம்பெற வேண்டும்= கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன் இருக்க வேண்டும்.
*பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை 30 வினாடிகள் வரும்படி மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்= பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற வேண்டும்.
*சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம் போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் நடக்கும் நேரம் குறிப்பிட வேண்டும்.
* கோயில் மண்டபங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்.
* அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் துாய்மையாக அணிந்திருக்க வேண்டும்.
* ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.
* ஒளிப்பதிவு அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
*மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.