பதிவு செய்த நாள்
08
ஜூலை
2020
11:07
சென்னை: சென்னை, மாதவரத்தில், அறநிலைய துறைக்கு சொந்தமான, 2௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, ஆண்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு விடும் வேடிக்கை தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலத்தில், நிலத்தடி நீர் திருட்டும், வாகனங்கள் நிறுத்துமிடமும் நடத்தி, தனியார் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
சென்னை, மாதவரம் மண்டலத்தின், 27வது வார்டில், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம், மூன்று சர்வே எண்களில் உள்ளது.அதை, அறநிலையதுறையினர், ஆண்டு தோறும், ஓராண்டுக்கான விவசாய குத்தகைக்கு விடுவது வழக்கம். இப்போதும், 1 ஏக்கர் நிலம், அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீதம், 10 ஏக்கர் நிலம், குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.அதை, குத்தகைக்கு எடுத்தோர், ஏதாவது ஒரு பகுதியில், பெயரளவிற்கு விவசாயம் செய்கின்றனர்.மற்ற இடங்களில், ஆழ்துளை குழாய்கள் அமைத்து, அவற்றின் மூலம், தினமும் ஏராளமான நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அடுக்குமாடி குடியிருப்பு, நட்சத்திர ஓட்டல் மற்றும் வணிக வளாகங்களுக்கு, விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். மேலும், அந்த இடம், டேங்கர் லாரிகளை நிறுத்தும், பார்க்கிங் ஆகவும், பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, இடத்தை குத்தகைக்கு எடுத்தோர், கணிசமான தொகையை, வாடகையாக வசூலிக்கின்றனர்.
அறநிலைத்துறையால், நிலத்தை பராமரிக்க முடியாத நிலையில், இன்றைய சந்தை மதிப்பின்படி, 150 முதல், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்திற்கு, குறைந்த பட்ச வருவாயாக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே, அறநிலைய துறைக்கு கிடைப்பது வேடிக்கையாக உள்ளது.கடந்த, 2005ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ.., மாஸ்டர் பிளான் மூலம், மேற்கண்ட இடம் குடியிருப்பு பகுதியாக, நில வகைப்பாடு செய்யப்பட்டது. ஆனால், அறநிலையதுறையோ, இன்று வரையிலும், அதை விவசாய நிலம் என்ற மதிப்பிலேயே, குத்தகைக்கு விடுகிறது.குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்ட, மேற்கண்ட இடத்தில், ஏரி, குளம் உள்ளிட்ட, நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டலாம். சமுக நலக்கூடம், மருத்துவமனை, விளையாட்டு மைதானம் என, மாநகராட்சிக்கு தேவையான, அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். ஹிந்து அறநிலைய துறை நிர்வாகம், மாநராட்சிக்கு நிலத்தை வழங்கினால், அடிப்படை கட்டமைப்புக்களாவது உருவாக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி இல்லாத பட்சத்தில், வர்த்தக நோக்கில், வாடகையை உயர்த்தி, அறநிலையத்துறை வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கலாம்.