பயன்படாத பொருட்கள், மிச்சம் மீதி இருக்கும் உணவு, உபயோகமற்ற ஆடைகள், தேவையின்றி ஒதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் என்று கொடுப்பதல்ல தர்மம். நாம் எதை உண்ண, உடுத்த, பயன்படுத்த விரும்புகிறோமோ அதையே மற்றவருக்கு கொடுப்பதே சிறந்த தர்மம். ‘‘நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கு கொடுக்காத வரை நன்மையை பெற மாட்டீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக இறைவன் நன்கறிவான்’’ இந்த வசனம் அருளப்பட்ட போது தோழர் அபூதல்ஹா, ‘‘இறைத்துாதரே! என்னுடைய சொத்துக்களில் மிகவும் பிரியமானது பைரஹா என்னும் தோட்டம். இறைவனின் அருளைப் பெற அதையே தர்மம் செய்ய விரும்புகிறேன்’’ என்றார். நண்பரின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து, ‘‘நண்பரே! பைரஹா நல்ல பலன் தரக்கூடிய தோட்டமாக இருக்கிறது. எனவே அதை உங்களுடைய ஏழை உறவினர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது நல்லது. அதுவே சிறந்த தர்மம்’’ என்றார். அபூதல்ஹாவும் அவ்வாறே செய்தார்.