காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தது. பறவை, விலங்குகள் என்று யாரைப் பார்த்தாலும் தன்னுடன் அதை ஒப்பிட்டு பார்க்கும். சிட்டுக்குருவி பறப்பதை பார்த்ததும் அது மாதிரி தன்னால் பறக்க முடியவில்லையே என்று வருந்தும். புள்ளிமானைக் கண்டால் அதன் அழகிய நிறமும், வடிவமும் அந்த யானையை கவர்ந்தது. இதுமாதிரி இல்லாமல் வெறும் கருப்பாக இருக்கிறோமே என ஏங்கும். அப்படியே பட்டினி கிடந்து தன்னைத்தானே வருத்திக் கொள்ளும். ஒருநாள் யானை ‘‘ புள்ளிமானே! உனக்கு மட்டும் ஆண்டவர் எப்படி இதுபோல் அழகான நிறத்தைக் கொடுத்தார். என்னுடைய கருப்பு நிறம் எனக்கு பிடிக்கவில்லை’’ என வெறுப்புடன் கூறியது. ‘‘ இது தான் உன்னுடைய கவலையா! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிறம், பண்புகள், பலத்தைக் கொடுத்திருக்கிறார். வேகமாக ஓடும் கால்களையும், மற்றவரைக் கவரும் நிறத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால் உனக்கோ மற்ற விலங்குளிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலம் வாய்ந்த கால்களை கொடுத்திருக்கிறார். பலத்த மரத்தையும் முறிக்கும் பலமான துதிக்கை, எதிரியைக் குத்தும் வலிமையான தந்தம் உன்னிடம் இருக்கிறது. இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். ஆறறிவு கொண்ட மனிதர்களுக்குத் தான் நிறத்தால் பிரச்னை அடிக்கடி வருகிறது. மனிதன் தான் மாறி விட்டான் என்றால் உனக்குமா நிறப் பாகுபாடு’’ என விளக்கியது. அதன்பின் யானை தன் சிறப்புகளை எண்ணி பெருமிதம் கொண்டது.