எத்தனையோ வழிபாடு செய்தும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. வருத்தமுடன் காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்தாள் ஒரு பெண். ‘‘சுவாமி! கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம் என முடிந்த ஸ்லோகங்களை எல்லாம் தினமும் சொல்கிறேன். ஆனால் கடவுள் கருணை காட்டவில்லையே. என் பிரச்னைகள் தீரவில்லை’’ ‘‘அதுசரி...எப்படி சொல்கிறாய்?’’ கேட்டார் சுவாமி. ‘‘நினைத்த நேரம் எல்லாம் சொல்வேன். வேலை பார்த்துக் கொண்டே சொல்வேன். எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு மனப்பாடம். புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தேவையே இல்லை!’’ அவ்வளவும் மனப்பாடம் என்பதில் அளவுகடந்த பெருமை அப்பெண்ணுக்கு. சுவாமிகள் புன்னகைத்தபடி ‘‘ கடவுள் ஒன்றும் உன் மனப்பாடத் திறமையைப் பரிசோதிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் இல்லை’’ என்றார். தற்பெருமை கொள்வது தவறு என்பது சுரீரென்று அவளின் புத்தியில் உறைத்தது. ‘‘எப்போதும் ஸ்லோகம் சொல்வது நல்லது தான். இதனால் மந்திர சப்தம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு முழுப்பயன் கிடைக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?’’ ‘‘சொல்லுங்கள் சுவாமி!’’ என்றாள் பணிவாக. ‘‘சமையலுக்குக் காய்கறி நறுக்கும் போது காய்களை அருகில் வைத்துக் கொள்வாய். அரிவாள் மனை, கத்தி எல்லாம் உன்கிட்டே இருக்கும். அடுப்படிக்கு போய்த் தான் நீ சமையலில் ஈடுபட முடியும். குளிக்க வேண்டும் என்றால் குளியலறையில் தண்ணீர் வாளியைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாய். அதுமாதிரிதான் ஸ்லோகம் சொல்வது. எல்லா இடத்திலும் கடவுள் இருப்பது உண்மையே. முழுமையாக உணர்ந்த ஞானிகளுக்குத் தான் அது பொருந்தும். பூஜையறையில் அமர்ந்து ஸ்லோகம் சொல். இஷ்ட தெய்வத்தின் படம் உன் முன்புறம் இருக்கட்டும். மனதை வேறு பக்கம் திரும்பாமல் ஸ்லோகத்திலேயே ஒருமைப்படுத்து. முடிந்தால் ஸ்லோகத்தின் பொருளையும் நினைத்துக் கொள். அப்படிச் செய்தால் ஸ்லோகங்களின் சக்தி அதிகரிக்கும் கடலுக்குள் கற்களை வீசினால் மூழ்கும். ஆனால் மரக்கட்டைகளை ஆணி அடித்துச் சேர்த்துத் தெப்பம் ஒன்றைச் செய்து அதில் கற்களை வைத்தால் தெப்பம் மூழ்காது. மனக்கடலிலே கடவுளைத் தெப்பமாக வைத்துக் கொள். அதிலே கவலைகளை ஏற்று. ஸ்லோகங்கள், மந்திரங்கள், பூஜைகள் எல்லாம் தெய்வத்தை இணைக்கும் ஆணிகள் போலத்தான். அப்புறமென்ன? பிரச்னைகள் தீரும். பிறவி என்னும் சம்சாரக் கடலில் மூழ்காமல் உன்னைக் கடவுள் கரை சேர்ப்பார். தெளிவு கிடைத்த மகிழ்ச்சியுடன் சுவாமிகளை வணங்கி விடை பெற்றாள்.