ஆபிரகாம் லிங்கனுக்கு அரசியலில் ஒரு பெரிய விரோதி இருந்தார். அவரது பெயர் ஸ்டான்ஸ்டன். புகழ் பெற்ற லிங்கனை அவர் வாய் கூசாமல் கீழ்த்தரமான கோமாளி என்றும், ஆதி மனித குரங்கு என்றும் கேலி செய்தார். லிங்கனைத் தாக்கி எவ்வளவோ பேசினார், எழுதினார். ஆனால், லிங்கனோ ஒரு வார்த்தையும் அவருக்கு விரோதமாகப் பேசவில்லை. யுத்தகாலம் வந்தது. ஆபிரகாம் லிங்கன் தன்னை எதிர்த்த ஸ்டான்ஸ்டனையே யுத்த மந்திரியாக நியமித்து அவருக்கிருந்த திறமைகளை மெச்சிப் பேசினார். அந்த அன்பின் செயல் ஸ்டான்ஸ்டனை உடைத்தது. தேசத்திற்காகவும் லிங்கனுக்காகவும் முழுபலத்தோடு உழைத்தார். லிங்கனின் மரணத்தில் அவர் மிகவும் தேம்பி அழுது, உலகத்தோற்ற முதலிலிருந்து, லிங்கனைப் போல அருமையான, அன்பான ஆட்சியாளர் இருந்ததில்லை என்று சாட்சி கொடுத்தார். ஆம், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.அன்புக்கு அளவில்லாத சகிப்புத் தன்மை உண்டு. அளவில்லாத பொறுமையுள்ளது! அன்புக்கு இருக்கும் இந்த குணாதிசயம் மிகவும் இனிமையானது; அதே நேரத்தில் வேதனையானதும் கூட!தான் விரும்புகிற காதலனை திருமணம் செய்து கொள்ள எவ்வளவு தியாகத்தோடு பெண் காத்திருக்கிறாள்! தன் கணவன் மனம் திருந்தி, தன்னை நேசிக்கமாட்டானா என்று மனைவி ஆவலுடன் காத்திருக்கிறாள். வெளிதேசம் சென்றிருக்கும் தகப்பன் திரும்பி வரமாட்டாரா என்று பிள்ளைகள் ஏங்கி எதிர்பார்க்கிறார்கள். அன்பு நீடிய சாந்தமுள்ளது; ஆகையால், எதிர்பார்போடு பொறுமையாய் காத்திருக்க கிருபையளிக்கிறது!யாக்கோபு, ராகேலின் மேல் அளவில்லாத அன்பு வைத்தபடியால் அவளுக்காக எந்த தியாகமும், அடிமை வேலையும் செய்ய ஆயத்தமாயிருந்தான். பதினான்கு ஆண்டுகள் பொறுமையாய் தன் மாமனாரைச் சேவித்தான். வேதம் சொல்லுகிறது. இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ் செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான் (ஓசியா 12:12)கர்த்தரும், நம்மேல் அன்பு வைத்து நம் மனம் திரும்புதலுக்காக நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார். நமக்காக ஜீவனைக் கொடுத்தவர் நம்மேல் கரிசனையுடன் இருக்கிறார். நமக்காக ரத்தம் சிந்தினவர் நம்மேல் அன்பு செலுத்தக் காத்திருக்கிறார்.