பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
12:07
புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் மீது, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர்.
மேல்முறையீடு: சில ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில் உள்ள, ஐந்து ரகசிய நிலவறைகளில் இருந்து, தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களும், பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறாவது நிலவறையை திறக்க மட்டும், மன்னர் குடும்பத்தினர் அனுமதி அளிக்கவில்லை. அந்த அறையை திறந்தால், அது மன்னர் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதால், அந்த அறை மட்டும் திறக்கப்படவில்லை.
இந்த பரபரப்பை அடுத்து, பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை, கேரள அரசு எடுத்து நடத்த வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம், 2011ல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை விதித்தது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்துடன், இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யு.யு.லலித் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
நிரந்தர கமிட்டி: அதில், பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தில், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கே உரிமை உள்ளது என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோவில் நிர்வாகத்தை கவனிக்க, நிரந்தர கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும், அதுவரை, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான, இடைக்கால நிர்வாக கமிட்டி உருவாக்கப்பட வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டது. அந்த கமிட்டியில், அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுஉள்ளது.
அதே போல, இதுவரை திறக்கப்படாத, கல்லற எனப்படும், ஆறாவது ரகசிய நிலவறையை திறப்பது குறித்து, மன்னர் குடும்பத்தினரே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், நீதிமன்றம் கூறியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை, கேரள அரசு வரவேற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவை, மாநில அரசு மதிக்கிறது. தீர்ப்பின் முழு விபரம் கிடைத்தவுடன், உத்தரவு நடைமுறை படுத்தப்படும், என, கேரள தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
வழக்கு கடந்து வந்த பாதை:
ஜன., 2009: கோவில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்தில் இருந்து, கேரள அரசுக்கு மாற்றக் கோரி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி டி.பி.சுந்தரராஜன், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
ஜன., 31, 2011: கோவிலை அரசு நிர்வகிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
மே 2: உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, கோவில் ரகசிய அறைகளை திறக்க உத்தரவு.
ஜூலை 8: கோவிலின், ஏ மற்றும் பி ரகசிய அறைகளை திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவு.
ஜூலை 21: சொத்துக்கள் மற்றும் ஆபரணங்களை மதிப்பிட நிபுணர் குழுவை அமைக்க, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
டிச., 6, 2013: உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மறைந்தார். அவரது சட்ட வாரிசுகள், வழக்கை தொடர்ந்தனர்.
ஏப்., 24: கோவிலை நிர்வகிக்க, மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவு.
ஜன., - ஏப்., 2019: நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா முன், வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது.
ஏப்., 10: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஜூலை 13, 2020: கோவில் மீது, மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.