மதுரையில் 2200ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால கல்தூண்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2020 10:07
திருமங்கலம், செக்காணுரணி அருகே கிண்ணிமங்கலம் ஏகநாத சுவாமி மடத்தில் இருந்த கல்துாண்களில் 2200ம் ஆண்டிற்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை மதுரை கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் கண்டுபிடித்துள்ளார்.காந்திராஜன் கூறியதாவது: இந்த மடத்தில் சில நாட்களுக்கு முன் ராஜவேல், ஆனந்தன் உடன் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது சங்க கால கருப்பு, சிகப்பு பானை ஓடுகள், நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து அங்கிருந்த சிறு துாண்களை ஆய்வு செய்த போது அதில் பிராமி எழுத்துக்கள் இருப்பதை கண்டறிந்தோம்.திண்டுக்கல் கோம்பை, தாதபட்டியில் பிராமி எழுத்து பொறித்த கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.இங்குள்ளஒரு துாணில் ’ஏகன் ஆதன் கோட்டம்’ என்ற பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கியத்தில் உள்ள கோட்டம் என்ற வார்த்தை துாணில் பொறிக்கப்பட்டிருப்பதை என் அனுபவத்தில் இங்கு முதல் முறை பார்க்கிறேன். மற்றொரு துாணில் ’இறையிழியாக ஏகநாதன் பள்ளிப்படை மண்டளி யீந்தார்’ என்ற வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.முதல், இரண்டாம் கல்லைஒப்பிடும் போது எழுத்துக்கள் எளிமையாக மாறியிருப்பதை உணரலாம். துாண்களில் எழுத்துக்கள் நுணுக்கமாக, மெல்லியதாக செதுக்கியது ஆச்சர்யம். இதற்காக பிரத்யேக உளி பயன்படுத்தியிருக்கலாம். மடத்திற்கு அருகே கருமாத்துார் ஆதிசிவன் கோயிலில் விளக்கு தண்டை இறைவனாக வழிபடுவதை பார்க்கும் போது இந்த துாண்களும் விளக்கு தண்டாக இருந்திருக்கலாம், என்றார்.