பதிவு செய்த நாள்
15
ஜூலை
2020
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டுக்கு வரும் ஆக., 1ல் அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 20 முதல், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு, வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், நாள்தோறும் வழக்கமாக நடக்கும், ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வரும், ஆக.,1ல் பக்தர்களை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதற்காக, பக்தர்கள் வரிசையாக, சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்யும் வகையில், தடுப்பு வேலி அமைக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், பக்தர்களை ராஜகோபுரம் மற்றும் அம்மணிஅம்மன் கோபுரம் வழியாக, கோவிலினுள் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.