பதிவு செய்த நாள்
15
ஜூலை
2020
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, ஏ.கே.படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் எடுத்த ஏ.கே.படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு, அம்மன் சிரசு, சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். கோவிலில் குங்குமத்துக்கு பதில், பிரசாதமாக மண் வழங்கப்படும். இக்கோவிலில், ஆடி மாதத்தில், ஏழு வாரங்கள் தொடர்ந்து ஆடி வெள்ளி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதை காண, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர். அம்மனை குலதெய்வமாக வழிபடும் பல்லாயிரக் கணக்கானோர், ஆடி மாதத்தில் வந்து வழிபட்டு செல்வர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஆடி வெள்ளி திருவிழாவை ரத்து செய்வதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.