பதிவு செய்த நாள்
16
ஜூலை
2020
10:07
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டம் அமைப்பை கண்டிக்கும் வகையில், இன்று(ஜூலை 16) மாலை 5:00 மணிக்கு, வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமானை வழிபடும் வகையில் பாடப்படும் கந்தர் சஷ்டி கவசம், மிகவும் புனிதமாக கருத்தப்படுகிறது.கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், இதை மிகவும் ஆபாசமாக விமர்சித்து ஒருவர் பதிவிட்டார். இது, ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் பல இடங்களில் அந்நபர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்ட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கருப்பர் கூட்டம் அமைப்பைக் கண்டித்து, வெற்றிவேல் வீரவேல் என்ற, ஹேஷ்டேக் உடன் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரவி வருகிறது.
அதில், இன்று முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில், வீடுகள் தோறும் கந்த சஷ்டி கவசம் பாடி, கண்டனம் தெரிவிப்போம். இது, ஆன்மிக பூமி என்பதை நிரூபிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை, 5:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடி நமது பக்தியை வெளிப்படுத்துவோம் என, பலரும் பதிலளித்து வருகின்றனர்.
ஆன்லைனில் புகார்: கருப்பர் கூட்டம் மீது, ஹிந்து முன்னணியினர், ஆன்லைன் வாயிலாக, போலீசில் புகார்கள் அளித்து வருகின்றனர். அதில், கருப்பர் கூட்டம் சேனலில், ஹிந்து கடவுள் சரஸ்வதியையும், பிற கடவுள்களையும் விமர்சித்துள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவால் ஜாதி, மதப்பிரச்னை ஏற்படும். கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வேண்டும். அவர்களின், யு டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், ஹரிஹரமுத்தய்யர், ஹிந்து மதத்தை பற்றி அவதுாறாக பேசுவோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.,யிடம் புகார்: கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தலைமையில், அக்கட்சியினர், கருப்பர் கூட்டம், யு டியூப் சேனலை தடை செய்யக் கோரியும், அதன் உரிமையாளர், கையாள்பவர்கள், கொச்சையாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அமைச்சர் எச்சரிக்கை: இப்பிரச்னை குறித்து, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், சமூக வலைதளங்களில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். - நமது நிருபர் குழு -