பதிவு செய்த நாள்
16
ஜூலை
2020
10:07
மேட்டுப்பாளையம்: கொரோனா தொடர் பிரச்னையால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது கொரோனா பிரச்னையால், கடந்த மார்ச் மாதம், 20 ம் தேதியிலிருந்து கோவில் அடைத்து, பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆடி குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நடைபெறும். விழாவின் நான்காம் நாள் லட்சார்ச்சனையும், 6 ம் நாள் கொடியேற்றமும், 7 ம் நாள் பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 8 ம் நாள் ஆடி குண்டம் இறங்குதல் நடைபெறும். அதை அடுத்து, 9 ம் நாள் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 10 ம் நாள் குதிரை வாகனத்தில், அம்மன் பரிவேட்டை திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடைபெறும். கோவிலில் ஆடிக்குண்டம் விழா, 15 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாக்களில், கோவை, ஈரோடு, திருப்பூர்,நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு வருகிற, 21ம் தேதி ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டும், 28 ம் தேதி குண்டம் விழாவும் நடைபெற இருந்தது. கொரோனா பிரச்னையால் ஆடி குண்டம் விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆனால் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி தெரிவித்தார். இருந்தபோதும் தினமும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து நுழைவாயில் முன்புள்ள கேட் அருகே சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.