ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு காலையில் கொடிபட்டம் மாடவீதிகளை சுற்றி கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் 10:50 மணிக்கு வாசுதேவபட்டர் கொடி ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில்பட்டர்கள் பங்கேற்றனர். விழாவின் போது பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்துகருடசேவை, சயனசேவை அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடக்கும். ஜூலை 24 காலை 8:05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கதேரில் ஆண்டாள் எழுந்தருள தேரோட்டமும் நடக்கிறது.