பதிவு செய்த நாள்
31
ஜூலை
2020
03:07
சென்னை : மூடப்பட்டுள்ள கோவில்களின் ஊழியர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு, அறநிலையத் துறை கடிதம் அனுப்பியிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் நாளிதழின், திருச்சி - வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார், இசைக்கலைஞர்கள், திருவிளக்கு ஏந்தி செல்பவர்கள் என, அனைத்து ஊழியர்களுக்கும், நிதி உதவி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி, கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கூறியிருப்பதாவது:கிராமங்களில் ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் வரும், 20 ஆயிரத்து, 204 கோவில்கள், வழிபாட்டுக்காக திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.நகர்ப்புறங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரிய கோவில்கள் என, 21 ஆயிரத்து, 131 கோவில்கள், வழிபாட்டுக்காக திறக்க அனுமதிக்கப் படவில்லை.மூடப்பட்டுள்ள கோவில்களின் ஊழியர்களுக்கு, கூடுதல் உதவி அளிக்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு, மே, 16 முதல், ஜூலை, 15 வரை, நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலிக்கும்படி, அறநிலையத்துறை முதன்மை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணையை, ஆக., 6க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.