திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்தார் ஒரு தோட்டக்காரர். அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே தோட்டத்தில் பணிபுரியும் வேலைக்காரனிடம், ‘பாரும், மூன்று ஆண்டாக அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். ‘‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு இடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்றான் வேலைக்காரன். இயேசு கூறிய உவமைக் கதை இது. அவர் வாழ்ந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய்பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ அவர்களைப் ‘பாவிகள்’ என மற்றவர்கள் முடிவு கட்டி விடுவர். தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவரே உண்மையில் பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.