ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற திருமாலுக்கு மூன்று மனைவியர். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் இம்மூவரும் இணைந்து ஒரே வடிவில் ஆண்டாளாக அருள்புரிவதாக ஐதீகம். மற்ற தலங்களில் பெருமாள் தம்பதி சமேதராக தேவியரோடு இருக்க, அவர் எதிரில் கருடாழ்வார் காட்சியளிப்பார். ஆனால், இங்கு கருவறையில் பெருமாளின் வலப்புறம் ஆண்டாளும், இடப்புறம் கருடாழ்வாரும் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறெந்த திவ்யதேசத்திலும் கிடையாது. இங்குள்ள தீர்த்தத்திற்கு முக்குளம் என்று பெயர். காலநேமி என்ற அரக்கனை கொல்ல புறப்பட்ட சக்ராயுதம் வெற்றியுடன் திரும்பியது. ரத்தம் தோய நின்ற சக்ராயுதத்தை சுத்தமாக்க, மகாவிஷ்ணு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று தீர்த்தங்களையும் ஒன்று சேர்த்து ஒரு குளத்தை உருவாக்கினார். அதில் நீராடிய சக்ராயுதம் புனிதம் அடைந்து பெருமாளின் திருக்கரத்தில் சேர்ந்தது. அப்புனிதக்குளமே முக்குளம் என்ற பெயரோடு இங்குள்ளது.