காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாகும். இந்த கோயிலில் அனந்தசரஸ் என்ற தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தை ஒட்டி கருங்கல்லால் எழுப்பப்பட்ட சுவர்களின் நடுவே, அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் சிலை இருக்கும். பெரும்பாலும் இதை தண்ணீர் மூடியிருக்கும். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளத்திலிருந்து பெருமாள் வெளியே எடுத்து வரப்படுவார். பக்தர்கள் தரிசனத்திற்கு 48 நாட்கள் கரையில் வைக்கப்பட்டிருக்கும். இதையொட்டி விசேஷ பூஜை நடக்கும். இதன்பிறகு மீண்டும் பெருமாள் குளத்திற்குள் சென்று விடுவார். ஒருவர் தனது வாழ்நாளில் அதிக பட்சமாக இரண்டுமுறை மட்டுமே இந்த பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.