அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி அயோத்தி நகரமே வண்ண விளக்குகள், தோரணங்களால் ஜொலிக்கிறது.
உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுதினம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்கு களாலும் தோரணங்களாலும் ஜொலிக்கிறது.
விழாவில் பிரதமர் மோடி உட்பட 200 வி.வி.ஐ.பி.க்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை வைத்து பகல் 12:15 மணியளவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியுடன் மேடையில் நான்கு பேர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அறக்கட்டளை நிர்வாகிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தனர். இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்க உள்ளனர். மஹாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களது ரத்தத்தையும் சதையையும் நாங்கள் கொடுத்துள்ளோம். அதனால் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
நிகழ்ச்சிகள் இன்று துவக்கம்: பூமி பூஜைக்கான நிகழ்ச்சிகள் அயோத்தியில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. இதற்காக வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம் முழுதும் கோயில்களில் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு பூஜைகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.