பதிவு செய்த நாள்
03
ஆக
2020
08:08
ராய்ப்பூர் : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்துக் கடவுள், ராமருக்கு கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை நடக்க உள்ளது. இந்நிலையில், ராமரின் தாயான, கவுசல்யாவுக்கு, சத்தீஸ்கரில் மிகப் பெரிய கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே, ராமரின் தாய் கவுசல்யாவின் கோவில் உள்ளது. ஏற்கனவே உள்ள கோவில், தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. கோவில் வளாகத்தை புதுப்பித்து அழகுபடுத்த, காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார். ராமர் வனவாசம் இருந்த போதும், சத்தீஸ்கரின் பல பகுதிகள் வழியாக சென்று உள்ளதாக, புராண கதைகள் கூறுகின்றன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட, ஒன்பது இடங்களை, சுற்றுலா தலங்களாக்க, ஏற்கனவே மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கவுசல்யா பிறந்த, சத்தீஸ்கரில் உள்ள அவருடைய கோவிலை புனரமைக்க, முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார்.