பதிவு செய்த நாள்
06
ஆக
2020
11:08
சென்னை : விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தலைமை செயலரிடம் வலியுறுத்தினர்.
வரும், 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இது தொடர்பாக, ஹிந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளுடன், நேற்று தலைமை செயலகத்தில், தலைமை செயலர் சண்முகம், ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி உட்பட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்; கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கூட்டம் முடிந்த பின், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது: விநாயகர் சிலைகள் அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது சம்பந்தமாக, அரசு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த வேண்டும்.
மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில்கள் மூடப்பட்டுள்ளன; அவற்றை திறக்க வேண்டும். பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து, இறைவனை வணங்கி செல்வர்.இ -- பாஸ் நடைமுறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கருத்துக்களை கேட்ட தலைமைச் செயலர், முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.