பதிவு செய்த நாள்
07
ஆக
2020
09:08
புதுடில்லி : பிரதமர் மோடி பங்கேற்ற, அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, உலகளவில் கோடிக்கணக்கான மக்கள், டிவி சேனல்களில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட அடிக்கல்லை வைத்து பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியை, துார்தர்ஷன் சேனல் நேரடியாக ஒளிபரப்பியது.
மேலும், இந்தியாவில், 200க்கும் அதிகமான தனியார் டிவி சேனல்கள், நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பின.யூ டியூப் சேனல்கள் வழியாகவும், இந்நிகழ்ச்சியை பலர் பார்த்தனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட ஏராளமான நாடுகளில், அயோத்தி நிகழ்ச்சியை, டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. இதை, பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இதனால், சர்வதேச அளவில், கோடிக்கணக்கான மக்கள் பார்த்த நிகழ்ச்சியாக, அயோத்தி அடிக்கல் நாட்டு விழா அமைந்துள்ளது.