பதிவு செய்த நாள்
08
ஆக
2020
10:08
கோவை: பள்ளி பாடங்கள் மட்டுமல்ல ஆன்லைனில், கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடுகளையும், கந்த சஷ்டி பாராயணத்தையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள கவுமாரா மடலாயமும், பேரூராதீனமும் துவங்கியுள்ளன.
உலகமும் முழுவதும் ஆன்மிகத்தில் ஒற்றுமை காண, ஆன்லைன் முறை அதிநவீன தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் கோவில்கள் திறக்கப்படவில்லை. பூஜைகள் நடந்தாலும், பொதுமக்கள் வழிபட இயலாமல் தவித்து வருகின்றனர். முதலில் மூடப்பட்டவை கோவில்களாக இருந்தாலும், இன்னும் திறக்கப்படாமல் இருப்பதும் கோவில்களாகவே உள்ளன. வழிபாட்டு முறைகளால் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், உலக நலன் கருதியும் ‘ஆன்லைன்’ முறையில் வழிபாடுகளை கோவை பேரூரில் உள்ள சிரவை ஆதினமும், சரவணம்பட்டியில் உள்ள சிரவை ஆதீனம் கவுமாரா மடாலாயும் இணைந்து துவக்கியுள்ளன.
முதல் நிகழ்ச்சியாக உலகநலன் வேண்டி நாளை (ஆக.9) ஞாயிறன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சியை நடத்துகின்றன. முகநுால் வழியாக நடக்கும் இந்த முதல் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் காண முடியும். இதற்கான ஜூம் ஐடி: 542 609 0334, சிரவை ஆதினம் பேஸ்புக்/யூடியூப்/ கெளமார மடலாயம், பேஸ்புக்/யூடியூப்/ பேரூராதினம் ஆகியவற்றில் நேரலையாக காண முடியும்.
இது குறித்த விளக்க நிகழ்ச்சியை, பேரூர் தமிழ் கல்லுாரி பேராசிரியை ஞானப்பூங்கோதை நேற்று விளக்கம் அளித்தார். இவரது விளக்கம், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஜூம் செயலி வழியாகவும், முகநுால் வழியாகவும் ஒளிபரப்பானது. ஆடி வெள்ளியை முன்னிட்டு இரண்டாவது நாளாக நேற்று மாலை இரு ஆதினங்கள் சார்பில் திருவிளக்கு வழிபாடுகள் நடந்தன. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்தார். சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் வாழ்த்துரை வழங்கினார். பக்தர்கள், அவரவர் வீடுகளில் இருந்தவாரே வழிபாடுகளை மேற்கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். மடாலயங்களில் நடந்த திருவிளக்கு பூஜைகள், யூடியூப் நேரலை வழியாக ஒளிபரப்பானது. பரபரப்பாக இயங்கிய சூழ்நிலையில் மக்கள் மன அழுத்தம் குறையவும், குறைகளை நிறைவேற்ற கோவில்களில் சென்றும் வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். காலத்தின் கட்டாயத்தால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இதில் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் ஆறுதல் பெறும் வகையில் இப்போது, ஆன்லைனில் ஆன்மிக வழிபாடுகள் துவங்கப்பட்டுள்ளன. அவரவர் வீடுகளில் துாய்மையாகவும், மன ஒருங்கிணைப்புடனும் வழிபாடுகளை துவக்கினால், ஒவ்வொரு வீடும் கோவிலாக மாறும்.