பதிவு செய்த நாள்
11
ஆக
2020
09:08
நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான். அவனது அவதார நன்னாளில், மகாகவி பாரதியார் பாடிய கண்ணன் பிறப்பு பாடலை நாமெல்லாம் பாடி மகிழ்வோமா!
கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன்பிறந்தான் இந்தக்
காற்றதை எட்டுத்திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி
வண்ணமுடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு
கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.
குழந்தையாக, தோழனாக, நாதனாக, தலைவனாக மற்றும் தெய்வமாக என்று கண்ணனை பல விதங்களில் போற்றி களிப்புறுகின்றனர், அவரது அடியவர்கள்.
கோகுலத்தில் மன்னன்: மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் சுகமாக வாழ்கிறார்கள் என்ற கர்வம் உண்டானது. அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த கிருஷ்ணர், தான் வசித்த ஆயர்பாடியில் இருந்த மக்களிடம் இந்திரனை வழிபடாமல், தங்களுக்கு பிழைப்பு தரும் கோவர்த்தனகிரியை (மலை) வழிபடும்படி கூறினார். கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கடுமையாக மழை பெய்வித்தான். கிருஷ்ணர், அந்த மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். மமதை அடங்கிய இந்திரன், கிருஷ்ணனுக்குப் பட்டாபிேஷகம் செய்து பிராயச்சித்தம் தேடினான். அன்று முதல் ‘கோகுலத்தின் மன்னன்’ என்னும் பொருளில் கிருஷ்ணருக்கு ‘கோவிந்தராஜன்’ என்ற பட்டம் உண்டானது. ‘கோவிந்தா’ என உள்ளத் துாய்மையோடு, தினமும் மூன்று முறை சொன்னால் பாவங்கள் தொலையும்.
பார்வை ஒன்றே போதும்!: கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும அவனை நாமும் அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு கடவுளை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில் பாலகிருஷ்ணனாக அவதரித்தான்.
மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ‘‘ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்’’ என்னும் பெயரில் நுாறு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.
அதில், ‘‘ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் கடவுளை ஜோதி வடிவில் பார்த்து விட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய முடியவில்லையே என வருந்த வேண்டாம். அந்த ஜோதியை நீல ஒளியாக, கார்மேக வண்ணனாக, யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்’’ என்கிறார். அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர்பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்குமு் என்பது மகான்களின் முடிவு.