பதிவு செய்த நாள்
13
ஆக
2020
09:08
பொங்கலூர்: இந்து முன்னணி சார்பில் பொங்கலூர் கண்டியன் கோவில் ஊராட்சி ஆலாம்பாளையத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி ஜரூராக நடந்து வருகிறது.
வரும், 22ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வசதியாக இந்து முன்னணி சார்பில் பொங்கலூர் கண்டியன் கோவில் ஊராட்சி ஆலாம்பாளையத்தில் விநாயகர் சிலை செய்யும் பணி ஜரூராக நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் இரவு பகலாக சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் சிலைகள் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு பசுவுடன் கூடிய விநாயகர், யானை விநாயகர், பாகுபலி-2 விநாயகர், சித்தி புத்தி விநாயகர், புல்லட் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், ரத விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், முருகர் விநாயகர், பாம்பே மாடல் விநாயகர் மற்றும் கொரோனா விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. சிலைகள் மூன்று முதல் ஒன்பது அடி வரை உயரம் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மைதா மாவு, இயற்கை சாயங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.