செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று விசேஷ வழிபாடு நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 500 கிலோ எடை உள்ள ஆப்பிள், மாதுளை, சாத்துகுடி உள்ளிட்ட 15 வகை பழங்களை கொண்டு சிறப்பு உற்சவர் அங்காளம்மனுக்கு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து விட்டனர்.